த. அஜந்தகுமார்
---குறிஞ்சி நாடன்

நூலாசிரியர் த.அஜந்தகுமார் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். தனது கலைமாணி சிறப்புப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்வே இந்த நூல்.;. தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராகத் துலங்குகிறார். ‘புதிய தரிசனம்’ என்ற கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து இலக்கிய அனுபவம் பெற்றவர். அவரது ஆய்வுத்திறனை வெளிக்காட்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
கிழக்கிலங்கை பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி செ.யோகராசா முன்னுரை வழங்கியுள்ளார். யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வாழ்த்துரை வழங்கியுள்ளார். இவ்விருவரும் நூலாசிரியர் த.அஜந்தகுமாரின் ஆற்றலை விதந்துரைத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகக் கொள்ளும் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் நூலாக வெளிவருவது இலக்கியவுலகிற்குப் புதிய வரவாகும். ஈழத்து இலக்கிய வார்ப்புகளை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிடுவது அண்மைக்காலங்களில் மிகுதியாகத் தென்படுகிறது. இது ஓர் ஆரோக்கியமான இலக்கிய செயற்பாடாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நூலாசிரியர் ‘திசை’ என்ற சிறு பத்திரிகையின் வரவையும் அதன் செயற்பாடுகளையும் இலக்கியவுலகிற்கும் சமூகத்திற்கும் அது ஆற்றிய பணிகளையும் விரிவாக ஆராய்ந்துள்ளார். அதற்கான உசாத்தணை நூல்களையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார். தனது ஆய்வுக்கு வலிவு சேர்ப்பதற்காக நவீன இலக்கிய வளர்ச்சிக்கு சிறு சஞ்சிகைகளும் பிரதேச, தேசிய பத்திரிகைகளும் அளித்த பங்களிப்பினை நூலின் முதலாவது இயலில் சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் என்பவற்றில் தோன்றிப் பங்களிப்புச் செய்த சிறு சஞ்சிகைகள் பற்றி விளக்கமாகக் கூறி ‘திசை’ என்கின்ற சிறுசஞ்சிகையின் வரவு, சூழல், அதனது பணி, தாக்கம் என்பவற்றை முழுமையாக ஆராய்ந்து தனது பணியை நிறைவேற்றியுள்ளார். இவரது ஆய்வு எதிர்காலத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபடப்போகும் இளம் ஆய்வாளர்களுக்கு உதவுகரமாக இருக்கும் என்பதைத் துணிந்து கூறலாம். பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் மலர்ந்து மறைந்த இதழ்கள் பற்றி அவை தோன்றிய ஆண்டுகளுடன் தந்துள்ளார்.
‘திசை’ 14.01.1989 இல் யாழ்ப்பாணம் நியூ ஈறா பப்ளிக்கேசன் மூலமாக வெளிவந்தது. இது ‘சற்றடே வியூ’ என்னும் பத்திரிகையின் சகோதரப்பத்திரிகை. முதல் வருடம் 51 இதழ்களும் இரண்டாம் வருடம் 18 இதழ்களுமாக மொத்தம் 69 இதழ்கள் வெளிவந்தன. பன்னிரண்டு பக்கங்களைக் கொண்ட அப்பத்திரிகையில் உருளும் உலகில், திசையின் முகம், தோழி, சமூகம், கலைச்சாரல், துவானம், சிறுகதை, போன்ற பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சமூகம், கல்வி, பண்பாடு. பெண் என்பவற்றில் அது பதித்த தாக்கம் பற்றியும் நூலாசிரியர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். திசையில் வெளிவந்த சிறுகதைகள், அவைகளை எழுதியவர்கள் பெயர்களுடன் ஒரு பட்டியலையும் நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். அவரது முயற்சி பாராட்டுக்குரியது. வுழிகாட்டக் கூடியது.

நன்றி:
-ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை
பெப்ரவரி 2010
த. அஜந்தகுமார்
---வெற்றிவேல் துஷ்யந்தன்


இலக்கிய வடிவங்களில் மிகப்பழைமை வாய்ந்த ஒரு இலக்கிய வடிவமாகக் கொள்ளப்படுவது கவிதை இலக்கியமாகும். ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல்வேறுபட்ட காலங்களில் பல்வேறுபட்ட படைப்புகள் தோன்றியிருப்பினும் அவற்றைத் தொகுப்புருவாக்கம் செய்கின்ற தன்மை அரிதாகக் காணப்பட்ட காலங்கள் இலக்கிய வரலாற்றில் இருந்ததுண்டு. இருப்பினும் சமகால இலக்கிய உலகினிலே படைப்புகளின் அதிகரிப்பும் மகோன்னதமும் காரணமாக படைப்புகள் நூலுருவாக்கம் பெறுகின்ற தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. புத்திரிகைளிலும் சரி சஞ்சிகைகளிலும் சரி வெளியாகின்ற படைப்புகள் நூலுருவாக்கம் பெறுகின்ற போது வாசகர் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. அந்தவகையில் அண்மையில் வெளிவந்த த.அஜந்தகுமாரின் ‘ ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசக நிலை நோக்காகவே இது அமைகின்றது.
அம்பலம் குழுமத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற இத்தொகுப்பினுள் மொத்தம் முப்பத்தெட்டுக்கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. எந்தவொரு படைப்பும் தொகுப்புருவாக்கம் அடைகின்ற போது படைப்பினுடைய உள்ளடக்கத்தினையும் தாண்டி படைப்பின் மீதான ஆர்வத்தை வாசகனுக்குத் தூண்டுவது படைப்பினுடைய முகப்பு. அந்தவகையில் இத்தொகுப்பின் அட்டைப்படம் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அண்மைக்கால இலக்கிய அறுவடைகளில் சற்று வித்தியாசமாகவும், சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைந்து இருக்கின்றது. சமகால கவிதை இலக்கியத்திலே இளையோரின் ஆதிக்கநிலை பல்கிப் பெருகிவரும் இக்காலகட்டத்தில் வித்தியாசமான படைப்புகளையும், உன்னதமான படைப்பகளையும் எழுதிவரும் படைப்பாளிகளுள் த.அஜந்தகுமார் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.
ஒரு படைப்பாளியின் பகைப்புலம், சமூகவாழ்வு என்பவற்றின் பிரதிபலிப்பே அவனுடைய படைப்பி;ல் அதிக தாக்கத்தை செலுத்திவருகின்றது. மனித மனம் விந்தையானது. அதிலும் கவிதை மனம் விந்தையிலும் விந்தையானது. இத்தொகுப்பினுள் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் சமூகவாழ்வினோடும் அனுபவத்தினோடும் பின்னிப்பிணைந்து உள்ளன.
கவிதை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மொழியின் பங்கு காத்திரமானது. கவிதைக்கூடாக வெளிப்படுத்தப்படும் உணர்வுகளையும், கருத்துகளையும் வாசகனுக்கு எளிதில் புரியவைப்பதில் மொழியின் பங்கு முக்கியமானது. அஜந்தகுமாரின் அனைத்துக் கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள மொழிகள் மிகவும் அற்புதமானவையாகவும் பிரக்ஞை பூர்வமானவையாகவும் காணப்படுகின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘புதிர்ப்பொழுதும்’ வாழ்வும் ‘ என்ற கவிதையில் வருகின்ற ,
“எனதிருப்பின் நிர்ணயங்கள்
நிர்வாணப்படுத்தப் படலாயிற்று
எனதிருப்பின் நிர்மூலம் குறித்த மூலம்
எங்கென்று தேடலுறும் திடத்தோடு
என் ஆத்மா அவதியுற்று
அலைந்து திரியத் தொடங்கலாயிற்று”
என்ற வரிகளில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் மொழி அற்புதமாகவும் உயிரோட்டமாகவும் இருக்கின்றது.இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள புரையோடிப் போன எமது போர்க்கால வாழ்வியலின் விசும்பல்களை குறியீட்டு ரீதியாகவும் யதார்த்தபூர்வமானவையாகவும் ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கத்திக்கொண்டிருக்கும் பூனை’ என்ற கவிதையில்,
“ செல்லடியே தாலாட்டாய்
மாற்றம் கண்ட புத்திரனல்லவா?
நான் தூங்கிப் போனேன்”
என்ற வரிகளில் யதார்த்தபூர்வமான வாழ்வனுபவங்களை தத்ரூபமாகப் படம் போட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
இத்தொகுப்பின் ஆசிரியர் த.அஜந்தகுமார் தமிழை சிறப்புப் பாடமாக பல்கலைக்கழகத்தில் கற்றதனாலும், தற்போது தமிழ்த்துறை உதவி விரிவுரையாளராக இருப்பதனாலும் என்னவோ தமிழுக்கு செழுமை சேர்க்கும் சொற்களை பேனாமுனையின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில கவிதைகள் வாழ்வியலில் மனிதனுக்கு அவனுடைய சக்தியையும் மீறி அவன் வாழுகின்ற சூழல் அவனுக்கு சில யதார்த்தத் தெறிப்புகளையும் உண்டு பண்ணிவிடுகின்றது என்பதையும் கூறி நிற்கின்றன. அந்த வகையில் ‘சிறகில்லா வாழ்வில் செல்லல்’ என்ற கவிதையில்,
“ பறப்பதற்குத் துடிக்கின்றன
எனது சிறகுகள்
………………………
வாழும் சூழல்
என்னை அமத்திப் பிடித்து
அச்சுறுத்தல் செய்கின்றது”
என்ற வரியூடாக ஆசிரியர் ஒரு காலத்தின் அடையாளத்தையே கூறி அற்புதமாக காட்டியிருக்கிறார்.
இலக்கியங்கள் என்பவை ஒரு காலத்தின் கண்ணாடி என்ற பொதுமைப்பட்ட கருத்தியலுக்கான எதிர்வினைகள் தோற்றம் பெறும் இக்காலகட்டத்தில் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிதான் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் அஜந்தகுமாரின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. இத்தொகுப்பி;ல் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் அற்புதமான மொழிநடை, படிமங்கள், யதார்த்தம் என்பவற்றின் அதீத வினைத்திறன் காரணமாக ஏதோ ஒரு செய்தியை வாசகனுக்கு புலப்படுத்தத் தவறவில்லை.
எந்தவொரு படைப்பிலும் காதலியம்சார் உணர்வலைகள் இடம்பெறும் போது விரும்பியொ விரும்பாமலோ அந்தப் படைப்பு வாசகனுக்குத் தீனிபோட்டு விடுகின்றது. த.அஜந்தகுமாரின் கவிதைகளில் பெரும்பாலும் காதல் உணர்வுகள் குறியீட்டுரீதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இருப்பினும் ‘நீயெனக்கு இல்லையென்றாகிவிட்ட இந்த இரவு’ என்ற கவிதையில்,
“ ………………
சொல்லமுடியாத் துயர்
விழிகளில் இரத்தமாய்க் கசிய
நீர் மறைத்து வலியின் சுழிப்போடு
உதடு பிரியா அவஸ்தையோடு
விடை கொடுத்தேன்”
என்ற வரியினூடாக நேரடியாகவே காதல் உணர்வை வெளிப்படுத்தி நிற்கிறார் ஆசிரியர். இவ்வரிகள் வாசகனிடம் காதல் உணர்வை மிக ஆழமாகக் கடத்திவிடுகின்றன.
தொகுப்பினுள் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் காணப்பட்டாலும்கூட பல்லி +வீடு+ நான்+அவள், ஒளிப்பிழம்பை வினாவுதல், அநிச்சயக்கோடுகளில் உதிரும் புன்னகைகள், அகால மரணத்தின் வாசல், நிலைத்தலின் பாங்கு போன்ற கவிதைகள் வித்தியாசமானவையாகவும் விதந்து பாராட்டப்பட வேண்டியவையாகவும் இருக்கின்றன.
த.அஜந்தகுமாரின் படைப்புலகம் பரந்துபட்டது. தனியே கவிதையுடன் மட்டுமல்லாது சிறுகதை,கட்டுரை, பத்தி, விமர்சனம் போன்ற துறைகளிலும் தனது பார்வையினை அகலமாக விரித்திருக்கின்றார். அஜந்தகுமாரின் படைப்புகளின் தீவிர வாசகன் என்ற ரீதியில் ஒன்றைக் கூறிக்கொள்ளவேண்டும். இத்தொகுப்பில் இடம்பெற்றவைதான் அஜந்தகுமாரின் மிகச்சிறந்த கவிதைகள் என்றில்லை. இவை தவிர இன்னும் பல மிகச் சிறந்த கவிதைகள் இருக்கின்றன. அவற்றையும் இத்தொகுப்பில் உள்ளடக்கியிருக்கலாம் என்பதே என்னுடைய அவா.
சமகால இலக்கியத்தில் தொகுப்புருவாக்கம் உன்னதமான வளர்ச்சியை அடைந்து வரும் இக்கால கட்டத்தில் தன்னுடைய அத்தனை கலைவெளிப்பாடுகளையுமு; உள்ளிருத்தி ஈழத்து கவிதை இலக்கியத்திற்கு ‘ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற காத்திரமான ஒரு பெறுமதியான படைப்பினை வழங்கிய அஜந்தகுமார் என்றுமே பாராட்டப்படக்கூடியவர். ஈழத்து நவீன கவிதை இலக்கியத்தில் ‘ ஒரு சோம்பேறியின் கடல்;’ என்ற தொகுப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இறுதியாக, இந்தத் தசாப்தத்தின் ஆரம்பத்தில் கவிதைத் தடாகத்தில் பயணிக்கத் தொடங்கிய அஜந்தகுமார் என்னும் படகு இத்தசாப்தத்தின் இறுதியில் முதற்கட்டமாகத் தன்னுடைய இலக்கை அடைந்து வெற்றியும் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நன்றி:
படிகள்
ஜனவரி 2010
த. அஜந்தகுமார்
---குப்பிழான் ஐ.சண்முகன்

‘ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற கவிதையோடு தொடங்கி ‘ஆர்ப்பரிக்கும் என் கடல’; என்ற கவிதையோடு நிறைவுறும் த.அஜந்தகுமாரின் இந்தக் கவிதைத் தொகுப்பில் எல்லாமாக முப்பத்தெட்டுத் தலைப்புகளில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கவிதைகளின் பேசுபொருள் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், கவிஞன் தன்னைப் பற்றி தன் கவிதைகளைப் பற்றி கூறிய சிலவற்றைப் பார்த்தல் வேண்டும்.

“ அக்காலத்தில் புதிதாக ஒரு சொல் எனக்குக் கிடைத்தாலே போதும், அதனோடு பொருந்தும் எதுகை மோனைகளோடு கவிதை படைத்துவிடுவேன். இப்போதும் சொற்களின் முதான பித்தும் பிரியமும் பெருகியபடியே இருக்கிறது. சொற்கள் ஒரு பாற்கடலாய் என் முன் விரிந்து அலையெறிந்தபடியே இருக்கின்றன. என் அனுபவ உடலோடு அதில் இறங்குகையில் இனம் புரியாப் பரவசம் என்னை ஆட்கொள்கிறது. மீண்டு வருகையில் குளித்து முடித்த பின் எஞ்சும் நீர்த்துளிகளாய் சில சொற்களே என்னோடு எஞ்சுகின்றன. நானும் என் அனுபவங்களும் சொற்களோடு போராடித் தோற்றபடியே திரும்ப வேண்டியிருக்கிறது. எனினும் சொற்களின் யாசகனாய் என் அனுபவங்களோடு தொடர்ந்தபடியே இருக்கிறேன்”

“இதிலுள்ள கவிதைகள் பெரும்பாலும் 2004 -2009 காலப்பகுதியில் எழுதப்பட்டவை. என்இ பல்கலைக்கழக வாழ்வுக்கவிதைகள் என்றுகூடச் சொல்லலாம். தன்னுணர்;ச்சிக்கவதைகளாயே பல கவிதைகள்”

“ பல துயரங்களை அவலங்களை என் மொழியில் எழுதிவிட முடியவில்லை”

என் துயரை மொழியில் அப்படியே இறக்கிவிட முடியவில்லை. எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாத கவிதைகளே அதிகம்”

கவிஞனின் தன்னைப் பற்றிய இப்பிரகடனங்களின் வெளிச்சத்தில் அஜந்தகுமாரின் கவிதைகளை இவ்வாறு பார்க்கலாம்.

ஐ. காம்பீரியமான – தனித்துவமான – மாயக்கவர்ச்சி காட்டும் சொற்களினூடு விரியும் அனுபவங்கள்
ஐஐ. வெளியே கோலங்காட்டாது – ஓவென்று கத்திக் குழறி ஆர்ப்பரிக்காது – மனதிற்குள் மௌடீகமாக குழறி அழுகின்ற இதயத்தைக் கசக்கிப் பிழியும் துயரங்கள்.

அனுபவங்கள் சொற்களால் அடுக்கி எழுப்பும் கட்டுமானத்திலேயே கலைநேர்த்தி கூடுகின்றது. மொழியால் எழுதும் எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்துமாயினும் கவிதைக்கே இது சிறப்பானதும் முக்கியமானதாகும். அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களி;ன் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


“ எதிலுமோர் நிழலின் தோற்றம்
தவிர்க்க முடியாதபடி எழுதப்பட்டு விடுகிறது”
“ புதிர்ப் பொழுதுகளைத் திணித்தே
போய்க் கொண்டிருக்கிறது வாழ்வு”

“ புதிரெறிந்து என்னோடு உலாவுகிறது
நிழல்களின் நீட்சி”

“ எனது சங்கடங்களின் தருணங்களில்
தொண்டைக்குள் நெளியும் புழுக்கள்”

“ நிலத்தின் மீது
கவிதை எழுதிக்
கரைகிறது மழை”

அஜந்தகுமாரின் பெரும்பாலான கவிதைகள் இன்னதென்று இனங்காண முடியாத துயரத்தையே பேசுகின்றன. வாழ்வின் இழைகள் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு துயரம் பின்னியிருக்கின்றதா? ஒவ்வொரு அனுபவமும் அல்லது அனுபவத்துக்கு அப்பாலான கணங்களும் துயரமானதா? துயர் தோய்ந்த வாழ்க்கை …. அல்லது வாழ்வின் துயர், இதுவே அஜந்தகுமாரின் கவிதைகளில் ஊடுருவி நிற்கும் பாடுபொருள். சில கவிதைகளில் ஆங்காங்கே மின்னல்களாய் வாழ்வின் மீதான நம்பிக்கைக் கீற்று ஒளிர்ந்தாலும் ஏமாற்றங்களாலும், வஞ்சனைகளாலும், எதிர்பாராத நிகழ்வுகளாலும், அநியாய- அட்டூழியங்களாலும் (போர்ச்சூழலினாலும்), ஏற்படுகின்ற நம்பிக்கை வரட்சி….அது தொற்றிய துயரங்கள்….”துயரின் துயரான துயரில் வளைகிறது வாழ்க்கை”.

“ நானிழக்கும் சுயங்களின் முகவரிகள்
ஏனிழந்து போகின்றன என்றறிய முடியாது
திணறும் கணங்கள்…”

“ வானிடிந்து வீழும் கணம் போல
நானும் நசுங்கிக் கிடந்து
நலிவுறுதல்….”

“ ஓர்மம் வடிந்து
ஒன்றிலும் குன்றாது
ஒடுங்குகிறது வாழ்வு...”

“ துயரின் நிலைத்த வாழ்வில்..”

“ சுயத்தின் தற்கொலை
சொல்லமுடியா
மொழிகளின் உடலில்…”

“காத்திருத்தல்
கானலென்ற உண்மையை…”



“ வாழும் சூழல்
என்னை அமத்திப் பிடித்து
அச்சுறுத்தல் செய்கிறது”

இஇருள் மண்டிக் கிடக்கும்
நீண்ட வீதிவழி
பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம்”


எனது
அகால மரணம் குறித்த
அதீத அச்சமொன்று
என்னுள் ஒளித்திருந்து…”

“ அதிகாரத்தின் வெம்மை
நெஞ்சுக்குள் பரவி
நெஞ்சுமயிர்களைப் பிடித்திழுக்கிறது”

“ சிரிப்புகள் வரண்ட
உதடுகளைச் சகிக்கமுடியாது….”

“ எல்லோரிடமும் பூத்துக்குலுங்கும் புன்னகை
என் முகம் கண்டதும்
ஓடிக்கொள்கிறது”

“ யாரையும் எளிதில் நம்ப முடியாத
அபத்தம் எண்ணி
என் மனம் அழுகின்றது”

சொல்ல முடியாத் துயர்
விழிகளில் இரத்தமாய்க் கசிய…”

இப்படி இப்படியே இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏன் இந்தத் துயரம்? பதின்ம வயதுகளைக் கடந்த - பல்கலைக்கழகத்தில் தன்னை ஒத்த சகபாடிகளுடன் படிக்கின்ற இளைஞன். அவனும் பல்கலைக்கழக மாணவனே ஆயினும் பெரும்பாலான சகபாடிகளினின்றும் சற்று வித்தியாசமானவன். கவிதா உணர்வு மிக்கவன். அவன் வாழ்வின் ஒவ்வொரு கண நிகழ்வுகளினாலும் பாதிக்கப்படுபவன்.
“கவிதைக்கான கருக்கள் ஒவ்வொரு பயணங்களிலும், ஒவ்வொரு நிகழ்வுகளிலும், ஒவ்வொரு நினைவுகளிலும், ஒவ்வொரு கனவுகளிலும் ஏதோவொரு வகையில் கிடைத்தபடியே இருக்கிறது” என்று அவனே எழுதுகிறான். கொடுமைகள் நிறைந்த கொடிய போரின் நெருக்குவாரச் சூழலில் … நாலைந்து வருட பல்கலைக்கழக வாழ்க்கை. கனவுகள் பூத்துக்குலுங்குகின்ற பருவம்: கனவுகள் சிதைந்து போகின்ற காலக் கொடுமை. ஆற்றாமைகளும், சுய(ம்)இழப்புகளும் - நேசமானவர்களைப் பிரிகின்ற வேதனைகளுமாய்….துயர் தோய்;ந்த வாழ்க்கை. ‘ என் துயர் -மற்றவன் துயர், என் துயர் சமூகத்தின் துயர்’ என நம்பும் அஜந்தகுமார் தன் துயரைப் பாடுகின்றான்: தனது சகபாடிகளான மற்றவன் துயரைப் பாடுகின்றான்: சமூகத்தி;ன் துயரைப் பாடுகின்றான். “துயரங்களால் புனையப்பட்ட இனிய கவிதைகள்: இனிய பாடல் ராகமுடையது” என்கிறார் ஆங்கிலக்கவி ஷெல்லி. ஒரு வகையில் அவரது நாலைந்து வருட பல்கலைக்கழக வாழ்வின் - நிகழ்வுகளின் துயர் தோய்ந்த கவித்துவமான பதிவுகளே இக்கவிதைத் தொகுப்பு எனலாம்.

அஜந்தகுமாரின் தொகுப்பிலுள்;ள எல்லாக் கவிதைகளும் வசன கவிதைகளே. (ஒளிப்பிழம்பை வினாவுதல் என்ற கவிதையில் கவியரங்கக் கவிதையின் சாயல் படிந்திருக்கிறது.) செயற்கைத்தனமான எதகை மோனைகளுடனான செய்யுள் மரபில் இருந்து அவர் விடுதலையாகி, உணர்வுகள் செறிந்த உரைநடையை ஊடகமாகக் கொண்டுள்ளார். வாக்கியங்களை முறித்து முறித்து அடுக்குவதனூடாககவிதையின் உருவத்தைக் கட்டி எழுப்புகின்றார். உதாரணமாக தொகுப்பின் தலைப்புக் கவிதையும் முதற் கவிதையுமான ‘ஒரு சோம்பேறியின் கடல்’ : “கடற்கரை மணலுள் புதைந்து, திமிறி நடக்கும் கால்கள்: நீ என் கைபிடித்தபடி ஓடுவதுபோல் பாய்ந்து பாய்ந்து நடக்கிறாய். நீ முன்னேயும் கொஞ்சம் நான் பின்னேயும் நடக்கிறோம்விரிந்து கிடக்கும் கடல்: வாவென்று. ஓடி வந்து நக்கி; நனைக்கும் அலைகள். நீ இப்போதென் மார்புள் புதைந்து உயிர் தடவுகிறாய். நான் கடலைப் பார்த்தபடியே இருக்கிறேன்….இப்படியே நீண்டு செல்லும் கவிதை.

இந்த உதாரணத்தின் ஊடாகவே அஜந்தகுமாரின் இன்னுமோர் அம்சத்தை எடுத்துக் காட்டலாம். கதைப்பாடல்கள்: கதை சொலல்வது போல அல்லது கதை சொல்வதாக விரியும் கவிதை. சங்ககாலத்தின் தன்னுணர்ச்சிக் கவிதைகள் போல: குறிப்பாக கலித்தொகைப் பாடல்கள் போல சிறு – கதைக் கவிதைகள். ‘ நடுச்சாமம்: திடுக்கிட்டு விழித்தேன். என்னைத் தட்டி எழுப்பிய திமிரோடு கத்திக் கொண்டிருந்தது பூனை. பசியாலோ குட்டி ஈன்றதாலோ , இருக்கப்படாத வியாதியாலோ அது கத்திக் கொண்டிருக்கலாம். படுத்திருந்தபடியே கலைத்துப் பார்த்தேன் . ஆத்திஜரம் தாங்காமல் தலையணையைத் தூக்கி அதன் மேல் எறிந்தேன்…………. இப்படியே.

இவற்றின் தொடர்ச்சியான இன்னொரு அம்சத்தையும் அஜந்தகுமாரின் பெரும்பாலான கவிதைகளில் காணலாம். இவர் தனக்குகள்ளே தான் பார்க்கும் அல்லது தன்னையே பார்க்கும் ‘அகமுகி’யாகவே தன்னுடைய கவிதைகளை எழுதுகின்றார். அதாவது இவரது கவிதைகள் ‘நான்’ என அல்லது ‘என் -எனது’ என தனது பார்வைகளையே – தனது அல்லது தான் உள்வாங்கிக் கொண்ட அனுபவங்களையே பேசுகின்றன. சும்மா இருக்கிறேன், பல்லி+வீடு+நான்+அவள், எனக்கான விசேட ஒளிபரப்பு,உன் தவறும் என் சக்தியும், என்னிலிருந்து வெளியேறும் ஒருவன், உருக்குலைந்த என் கவிதைகள், என்னுள் நவீன ஓவியம், நீயெனக்கு இல்லையென்றான இந்த இரவு,ஆர்ப்பரிக்கும் என் கடல் ஆகிய இவரின் கவிதைத் தலைப்புகளையே இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். கவிதைக்குள்ளே போனால்,

“எனதிருப்பின் நிர்ணயங்கள்
நிர்வாணப்படுத்தப்படலாயிற்று…..”

“வகுப்பறையில்
வண்ணத்துப்ப+ச்சி அமர்ந்திருந்த போது
அதன் சிறகுகளில் இருந்து
வானில் விரியத் தொடங்கினேன்…. “


“நான் எழுத நினைத்த கவிதை
எழுதப்பட்டதான
உனது விமர்சனம் முன்
உன்னை ஒன்று கேட்பேன்”

“பறப்பதற்கு துடிக்கின்றன
எனது சிறகுகள்……”

என்னோடு கைகோர்த்து
கதைத்தபடி கடைக்குச்
சாப்பிட வந்தவள்….

யாரையும் எளிதில் நம்பமுடியாத
அபத்தம் எண்ணி
என் மனம் அழுகின்றது

என்றெல்லாம் எழுதிச் செல்கிறார். இவரின் கவிதைகளில் ஆங்காங்கே எமது நடப்பு வாழ்வின் காட்சிகளும், நிகழ்வுகளும் கோலங் காட்டுகின்றன.

“ ஊர்க் கோழிகள்
கிண்டிக் கிளறிய
குப்பைகளைக்
காற்று காவித் தெரிகிறது…”
என்று ஒரு கவிதையிலும்,

“ நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.

ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக் கிடந்து…….”

என்று வேறோர் கவிதையிலும் இவ்வாறே வேறுவேறு கவிதைகளிலும் எழுதிச் செல்கின்றார்.

இதுவரை நான் எழுதியவை எல்லாம் இவரது கவிதைகளில் நான் கண்டுணர்ந்த – அனுபவித்த அம்சங்களில் சில மட்டுமே. நான் கண்டும் சொல்லாமல் விட்டவையும், சொல்ல முடியாமல் விட்டவையும் இவற்றுக்கு மேலாக என்னால் கண்டு கொள்ளமுடியாமல் விட்டவையும் பல உள. குறிப்பாக இக்கவிதைகள் பேசும் மறைபொருளை, ப+டகப்பொருளை, குறியீட்டுப் பொருளை , படிமங்களைப் பற்றி நான் எதுவுமே பேசவில்லை. ‘எழுதப்பட்ட கவிதைகளைக் காட்டிலும் எழுதப்படாத கவிதைகளே அதிகம்’ என்று கவிஞன் தன் பிரகடனத்தில் கூறிய மாதிரி நானும் முடிக்கிறேன். இக்கவிதைத் தொகுப்புப் பற்றி நான் எழுதியவற்றைக் காட்டிலும் எழுதப்படாதவைகளே அதிகம். ஆகவே நண்பர்களே இத்தொகுப்பைக் கருத்தூன்றிப்படியுங்கள். படித்தால்தான் கவிஞனின் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தைக் காண்பீர்கள்.

முடிவாக ஒரு வார்த்தை: அழகான தயாரிப்பில் கைக்கு அடக்கமாக, தெளிவான அச்சுப்பதிப்பில் வந்திருக்கும் இந்நூலில், அப+ர்வமாகக் காணப்படும் ‘கருத்தைப் பிறழ வைக்கும் ‘ அச்சுப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.


பிற்சேர்க்கை: இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கவிதைகள் -
நீயெனக்கு இல்லையென்றான இந்த இரவு, ஒரு தேவதையின் ஒளிக்கவிதை,( சில உறுத்தல்கள் இருந்த போதிலும்) ஒளிப்பிழம்பை வினாவுதல்