த. அஜந்தகுமார்
---கமலசுதர்சன்

எந்த இடத்திலும் பாய்ந்து செல்லும் வெள்ளம் கவிஞனின் உள்ளம். அவனது கவிதைகளில் ஏன் ? எப்படி ? என்ற கேள்விகள் எழுமானால் கேள்வியை எழுப்பியவர்கள்தான் பதில் சொல்லவேண்டுமே தவிர அது கவிஞனின் வேலையல்ல. அவன் சொல்வதெல்லாம் அவனுக்கு நியாயமே. யாருக்கு எது பிடிக்கும் என்று தேடிப்பார்த்து அவன் பரிமாறமுடியாது.
அவன் விரித்த பந்தி…..!
அவன் போட்ட இலை….!
அவன் வைக்கின்ற உணவு

பசிக்கின்ற நல்ல வயிறு உள்ளவர்கள் அங்கே அமரலாம். யார் யாருக்குப் பசிக்குமென்று அவன் கண்டுபிடிக்கமுடியாது. ஆகவே , தான் என்ற நிலையிலிருந்து தனக்காக என்ற ஆசையோடு அவன் படைக்கின்ற விருந்துதான் சமூகத்தின் முன்னால் வைக்கப்படுகிறது.கவியரசு கண்ணதாசனின் காலத்தை வென்று நிற்கும் மேற்கூறிய வார்த்தைகளை நானும் வழிமொழிந்து த.அஜந்தகுமாரின் ‘ஒரு சோம்பேறியின் கடலில்’ என் பாதங்களை வைக்கிறேன்.
நூலின் அட்டைப்படத்துள் வாத்துகள் வரையப்பட்டுள்ளன. பின்னணியில் நீலவர்ணம் தீட்டப்பட்டுள்ளது. வாத்துகள் மெல்ல நடைபயில்வன. ஆகவே நூலின் தலைப்பிற்கேற்ப இவை பொருத்தப்பாடு உடையன. இந்நூல் அவையத்து முந்தியிருப்பச் செய்த தந்தைக்கும் , ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் அன்னைக்கும் சமர்ப்பணமானது நெஞ்சைத் தொடுகின்றது.

யதார்த்த சமூகத்தோடு போராடித் தோற்கின்ற நிலையை இக்கவிதைகளில் காண்கிறோம். ‘சும்மா இருக்கிறேன்’ கவிதையில்,
‘முயற்சி ஏணியில் ஏறும்போது
சறுக்கும் பொழுதுகள்
நிமிர்விற்கான ஒத்திகைகளோடும்
உண்மை நிமிர்விற்கான பொழுதுகளோடும்
சேர்த்தென்னைத் தின்று கொண்டிருக்;கின்றன’
சாண் ஏற முழம் சறுக்கும் நிலையை – உயர்ச்சிக்கு மிஞ்சிய தளர்ச்சியை அவதானிக்கிறோம். இந்நிலையைப் ‘புதிர்ப்பொழுதுகளும் வாழ்வும்’ கவிதையில்,

‘என்வாழ்வின்
சின்ன வட்டமும்
சிதைந்தழிந்து போமோவென்று
துயரொன்று படர்கிறது’
ஊர் வாயை மூடமுடியாது என்பர். ‘உன்னை வினாவுதல்’ என்னும் கவிதையில்,
‘எழுதாத என் கவிதைக்கான
விமர்சனத்தை
தெருப்புழுதிகள்
சேர்ந்தெழுதி ஆரவாரிக்கின்றன’ என்று வெறும் வாயை மெல்லலை எமக்கு நினைவூட்டுகிறார்.

எம்மையெல்லாம் போர்க்காலக் குழந்தைகள் என்று கூறுவர். போரின் வடுக்களின் தாக்கத்தினை,
‘செல்லடியே தாலாட்டாய்
மாற்றங்கண்ட புத்திரனல்லவா?
நான் தூங்கிப் போனேன்’
என உணர்த்துகிறார்.
;நிர்வாணத் தெருவும் கவிஞனின் வலியும்’ கவிதையில்,
‘ இப்போதெல்லாம் தெருக்களுக்கு
உடுத்தலும் கலைத்தலும்
நிர்வாணமும்
மீண்டும் பழக்கமாகி விட்டது’ என்கிறார். எம் பாடசாலை நாட்களில் வீதியில் குருதி சொட்டி உயிர் ஒழுகும் உடலங்களை கடந்து வந்த சம்பவங்கள் இன்னமும் என் நினைவில் இருக்கிறது.
நம்பிக்கைகக்கும் நம்பிக்கை இழத்தலுக்கும் இடையிலான நிலையை ,
‘ கடலின் ஆழத்தில்
ஏதோவோர் மூலையில் கிடந்து
பாசி படிகிறது
நம்பிக்கை’

‘……………….
நம்பிக்கை மட்டும் சிதையாது தேங்கிற்று

நம்பிக்கை நிரப்பி
நீண்ட பொழுதுகளாய்
எந்தன் தவமிருத்தல் நீள்கிறது’

‘ இப்போது கூட நீயொரு கிளையினை
வெட்டுவதை நானுணர்வேன்
மறுபக்கமாய் இந்த விருட்சத்தில்
ஒரு துளிர்ப்பின் நிகழ்தலொன்றை
நீ கவனிக்கத் தவறுகிறாய்;’
…………………
இனி … நான் எதற்கும் தயார்
எங்கே …என் ஆயுதத்தோடு வா பார்க்கலாம்’
என்று அறைகூவும் போது நம்பிக்கை வலுவடைகிறது.
‘சிறகில்லா வாழ்வில் செல்லல்’ எனும் கவிதையில்,
“ இப்போது நானும்
பட்டத்துக்கும் வேலைக்குமாய்
படிக்கிறேன்
எல்லோரையும் போலவே” எனும் வரிகளுக்கூடாக இன்றைய கல்விமுறையைச் சாடுவதோடு, யதார்த்தத்தின் கசப்பையும் சொல்கிறார் .
கவிதையினுடைய தோற்றுவாய் குறித்து கூறும் போது ,
“ அசரீரியாய் அவளுதிர்க்கும்
வார்த்தைகள்
செவியடைந்து என்னைக்
கவியாக்கத் துடித்தன”
என்பதனூடாக உணர்த்துகிறார்.
‘நிலைத்தலின் பாங்கு ‘ கவிதையில் ,
“சிற்பி செத்திருந்தான்
சிற்பம் உயிர்த்திருந்தது” என கூறுகையில் ‘ படைப்பாளி இறந்துவிட்டான் படைப்பு இருக்கிறது’ என்னும் வாதத்தின் தொனியைக் கேட்கிறோம்.

சுந்தரராமசாமி கூறுவது போன்று ‘ படைப்பாளிக்குரிய நிம்மதியின்மையின் ஆசீர்வாதம்’ அஜந்தகுமாருக்கும் இருக்கிறது என்பதனை கவிதைகளினைப் படித்த பின் கூறமுடிகிறது. கலைஞனுக்கு இருக்கவேண்டிய திருப்தி காணாத மனம் தொடர்ந்து இயங்கவைக்கும். ‘ஒரு சோம்பேறியி;ன் கடல்’ என ஆரம்பித்த கவிதை ‘ ஆர்ப்பரிக்கும் என் கடல்” என முடிவது அழகானது, நம்பிக்கை ஊட்டுகிறது.
படிமங்கள், குறியீடுகளை கையாள்வது தொடர்பாக, கவிதைகளின் எளிமைத்தன்மை தொடர்பாக பல்வேறு வாதங்கள் இற்றைவரை முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வயது வந்த ஒருவர் ‘ நான் இப்போதும் அம்புலிமாமா கதைப்புத்தகம் வாசிக்கிறேன், சுட்டி ரீ.வி பார்க்கிறேன்’ எனக்கூறுவது அழகானதல்ல. வாசகன் தன் வாசிப்பு மட்டத்தை உயர்த்தவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
இறுதியாக அஜந்தகுமார் அவர்கள் கூறுவது போல ‘ சொற்களுக்கு அப்பால் விரிந்து செல்லும் கவிதைவெளிக்குள் நாம் சஞ்சரிக்கவேண்டும்., அந்தப் பக்குவம் எளிமையாக வாய்த்துவிடாது, அதற்கான ஒரே தகுதி, நல்ல வாசகன் என்பதுதான்’. இதுவரை சோம்பேறியின் கடலாய் இருந்;த மனம் ஆர்ப்பரிக்கும் கடலாகும்.
அஜந்தகுமார் அவர்கள் மேலும் பல ஆக்க இலக்கியங்கள், ஆய்வுகள் எனத் தமிழுலக்கு தரவேண்டும் என்பது எமது அவா.
0 Responses

Post a Comment