த. அஜந்தகுமார்
---குறிஞ்சி நாடன்

நூலாசிரியர் த.அஜந்தகுமார் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். தனது கலைமாணி சிறப்புப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்வே இந்த நூல்.;. தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராகத் துலங்குகிறார். ‘புதிய தரிசனம்’ என்ற கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து இலக்கிய அனுபவம் பெற்றவர். அவரது ஆய்வுத்திறனை வெளிக்காட்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
கிழக்கிலங்கை பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி செ.யோகராசா முன்னுரை வழங்கியுள்ளார். யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வாழ்த்துரை வழங்கியுள்ளார். இவ்விருவரும் நூலாசிரியர் த.அஜந்தகுமாரின் ஆற்றலை விதந்துரைத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகக் கொள்ளும் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் நூலாக வெளிவருவது இலக்கியவுலகிற்குப் புதிய வரவாகும். ஈழத்து இலக்கிய வார்ப்புகளை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிடுவது அண்மைக்காலங்களில் மிகுதியாகத் தென்படுகிறது. இது ஓர் ஆரோக்கியமான இலக்கிய செயற்பாடாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நூலாசிரியர் ‘திசை’ என்ற சிறு பத்திரிகையின் வரவையும் அதன் செயற்பாடுகளையும் இலக்கியவுலகிற்கும் சமூகத்திற்கும் அது ஆற்றிய பணிகளையும் விரிவாக ஆராய்ந்துள்ளார். அதற்கான உசாத்தணை நூல்களையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார். தனது ஆய்வுக்கு வலிவு சேர்ப்பதற்காக நவீன இலக்கிய வளர்ச்சிக்கு சிறு சஞ்சிகைகளும் பிரதேச, தேசிய பத்திரிகைகளும் அளித்த பங்களிப்பினை நூலின் முதலாவது இயலில் சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் என்பவற்றில் தோன்றிப் பங்களிப்புச் செய்த சிறு சஞ்சிகைகள் பற்றி விளக்கமாகக் கூறி ‘திசை’ என்கின்ற சிறுசஞ்சிகையின் வரவு, சூழல், அதனது பணி, தாக்கம் என்பவற்றை முழுமையாக ஆராய்ந்து தனது பணியை நிறைவேற்றியுள்ளார். இவரது ஆய்வு எதிர்காலத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபடப்போகும் இளம் ஆய்வாளர்களுக்கு உதவுகரமாக இருக்கும் என்பதைத் துணிந்து கூறலாம். பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் மலர்ந்து மறைந்த இதழ்கள் பற்றி அவை தோன்றிய ஆண்டுகளுடன் தந்துள்ளார்.
‘திசை’ 14.01.1989 இல் யாழ்ப்பாணம் நியூ ஈறா பப்ளிக்கேசன் மூலமாக வெளிவந்தது. இது ‘சற்றடே வியூ’ என்னும் பத்திரிகையின் சகோதரப்பத்திரிகை. முதல் வருடம் 51 இதழ்களும் இரண்டாம் வருடம் 18 இதழ்களுமாக மொத்தம் 69 இதழ்கள் வெளிவந்தன. பன்னிரண்டு பக்கங்களைக் கொண்ட அப்பத்திரிகையில் உருளும் உலகில், திசையின் முகம், தோழி, சமூகம், கலைச்சாரல், துவானம், சிறுகதை, போன்ற பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சமூகம், கல்வி, பண்பாடு. பெண் என்பவற்றில் அது பதித்த தாக்கம் பற்றியும் நூலாசிரியர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். திசையில் வெளிவந்த சிறுகதைகள், அவைகளை எழுதியவர்கள் பெயர்களுடன் ஒரு பட்டியலையும் நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். அவரது முயற்சி பாராட்டுக்குரியது. வுழிகாட்டக் கூடியது.

நன்றி:
-ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை
பெப்ரவரி 2010
0 Responses

Post a Comment